ஆண்டுக்கு 4 சமையல் எரிவாயுதான் மானிய விலையில் வழங்க வேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார பார்வை குறித்த அறிக்கையை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் நேற்று வெளியிட்டார்.
மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள அறிக்கையில், டீசல் விலையை ஒன்றல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் உரிய அளவுக்கு உயர்த்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து பரிசீலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூ.12.13 இழப்பு ஏற்படுவதாகவும், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தினால், மானியத்தின் அளவு ரூ.7 ஆயிரத்து 800 கோடியாக குறையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவை பொறுத்தவரையில் கடந்த 10ஆம் தேதி நிலவரப்படி ஒரு எரிவாயுவுக்கு, அரசு ரூ.231 மானியம் அளிக்கிறது. நாட்டில் 29 சதவீத குடும்பத்தினர் ஆண்டுக்கு 4 சமையல் எரிவாயுவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். எனவே ஆண்டுக்கு 4 எரிவாயுதான் மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற நிலையை கொண்டு வரவேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
இப்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 4 சமையல் எரிவாயு மட்டுமே மானிய விலையில் வழங்கினால், சமையல் எரிவாயு வினியோகத்துக்கு அரசு வழங்குகிற மானியத்தின் அளவு ரூ. 18 ஆயிரம் கோடியாகக் குறையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு அளித்துள்ள அறிக்கையை மத்திய அரசு ஆராய்ந்து உரிய முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது.