பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து இன்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த விலையுயர்வு முற்றிலும் தேவையற்றது என்றும், விலையயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
கேள்விநேரத்திற்குப் பின் இப்பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் அரசு நடத்தியுள்ள நள்ளிரவு நடவடிக்கை என்று குறைகூறினார்கள்.
இந்த விலையுயர்வு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியதை மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான் நிராகரித்தார். இதையடுத்து, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அஇஅதிமுக, சமாஜ்வாடி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.