பூர்வாஞ்சல் உருவானால் பீகாரின் சில பகுதிகள் சேர்க்கப்படும் - ஜெய்ஸ்வால்

செவ்வாய், 15 டிசம்பர் 2009 (19:16 IST)
உத்தரப்பிரதேசத்தைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலம் உருவாக்கப்பட்டால், பீகாரின் சில பகுதிகள் அதில் சேர்க்கப்படும் என்று மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.

ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆந்திராவில் கலவரம் உருவாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை 3ஆகப் பிரிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மாயாவதி ஏற்கனவே கூறியிருந்தார்.

உத்தரப்பிரதேசத்தைப் பிரித்து பூர்வாஞ்சல் என்ற பெயரில் புதிய மாநிலம் உருவாகும்பட்சத்தில், பீகாரின் சில பகுதிகளும் அதில் இடம்பெறும் என்று அமைச்சர் ஜெய்ஸ்வால் ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பீகாரின் ஒருசில பகுதிகள் நிச்சயம் பூர்வாஞ்சலில் சேர்க்கப்படும் என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்