பிரான்ஸ் அனுப்பிய அணு எரிபொருள் இந்தியா வந்தடைந்தது

புதன், 1 ஏப்ரல் 2009 (13:51 IST)
சர்வதேச அணு சக்தி முகமையின் (ஐ.ஏ.ஈ.ஏ) அனுமதியைத் தொடர்ந்து பிரான்ஸ் அனுப்பிய 60 டன் யுரேனியம் எரிபொருள், ஹைதராபாத்தில் உள்ள அணு சக்தி எரிபொருள் மையத்திற்கு வந்தடைந்தது.

இந்தியாவில் கடின நீர் அணு மின்சக்தி நிலையங்களில் எரிபொருளாக இந்த யுரேனியம் பயன்படுத்தப்பட உள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அணு சக்தி எரிபொருள் மையத்தின் முதன்மை நிர்வாகி ஆர்.என்.ஜெயராஜ், முதற்கட்டமாக பிரான்ஸில் இருந்து வந்துள்ள 60 டன் யரேனியமும், அணு உலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு செரிவூட்டப்டும் என்றார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணு சக்தி முகமை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்தியா-பிரான்ஸ் இடையே அணு சக்தி எரிபொருள், அணு உலை வழங்கல் தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி 300 டன் யுரேனியம் வழங்க பிரான்ஸ் நிறுவனமான அரீவா என்சி ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக அனுப்பப்பட்ட 60 டன் யுரேனியம் எரிபொருள் ஹைதராபாத் அணு சக்தி எரிபொருள் மையத்திற்கு வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்