பரோலை நீட்டிக்க சஞ்சய் தத் மீண்டும் மனு

திங்கள், 10 பிப்ரவரி 2014 (18:13 IST)
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சஞ்சய் தத் பரோல் விடுமுறையை நீட்டிக்க இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
FILE

மும்பையில் கடந்த 93 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை 5 ஆண்டாகக் குறைத்து. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் புனே எரவாடா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். உடல் நிலை சரியில்லை என கடந்த அக்டோபர் மாதம் அவர் ஒரு மாதம் பரோலில் விடுதலை ஆனார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஜனவரி மாதம் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என மீண்டும் பரோலில் வந்தார். பரோல் முடியும் தருவாயில் விடுதலை காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். இதனை புனே கலெக்டர் ஏற்றுக் கொண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை பரோல் காலத்தை நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் பரோல் காலத்தை மீண்டும் நீட்டிக்க கோரி 2-வது முறையாக சஞ்சய் தத் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்