தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்தார் அஜித் சிங்
திங்கள், 2 மார்ச் 2009 (16:29 IST)
புது டெல்லி : மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், தே.ஜ.கூ.யின் ஒருங்கிணைப்பாளர் சரத் யாதவ், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் முன்னிலையில் தே.ஜ.கூ.யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைவு இன்று காலை அறிவிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் தே.ஜ.கூ.வும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கை கோர்த்து உள்ளதன் மூலம், அஜித் சிங், அவரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான செளத்ரி சரண் சிங் ஆகியோரின் வலுவான அடித்தளமான மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தே.ஜ.கூ.விற்கு சாதகமான சூழல் வலுப்பெறும். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் விலகியதால் பா.ஜ.க. விற்கு ஏற்பட்டுள்ள இழப்பு சரிகட்டப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் தொகுதியில் போட்டியிட உள்ளவரும் பா.ஜ.க. தலைவருமான ராஜ்நாத் சிங் கூறுகையில், முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றிற்கு எதிரான மாற்று அரசியல் கூட்டணி வலுப்பெற அஜித் சிங்கின் வருகை உதவும் என்றார். தே.ஜ.கூ.யின் வலு அதிகரிக்கிறது என்பதற்கு இது ஒரு தெளிவான குறியீடு என்றார் அவர்.
எல்.கே. அத்வானி பேசுகையில், கடந்த 1984இல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. செளத்ரி சரண் சிங் தலைமையிலான லோக் தளம் கட்சி 3 இடங்களில் வென்றது. ராஜீவ் காந்தி தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் பெற்றதைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றது என்பதை நினைவுகூர்ந்தார்.
இதையடுத்து 1989இல் நடந்த அடுத்த மக்களவைத் தேர்தலில், வலதுசாரிக் கட்சியாகக் கருதப்படும் பா.ஜ.க., இடதுசாரிகள் ஆகியோரின் ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணிக் கூட்டணி உருவானபோதுதான் கூட்டணியின் மகத்துவம் தெரியவந்தது.
பா.ஜ.க.வும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியும் மீண்டும் இணைந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும், மத்தியில் உள்ள திறனற்ற ஐ.மு.கூ. அரசிடம் இருந்து நாட்டையும், குறிக்கோளற்ற பகுஜன் சமாஜ் கட்சியிடம் இருந்து உத்தரப் பிரதேசத்தையும் விடுவிக்க உதவும் என்றார் அத்வானி.
"விவசாயிகள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மிகவும் நம்பிக்கை தரும் மிகப்பெரிய கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ந்துள்ளது" என்று தே.ஜ.கூ. ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான சரத் யாதவ் கூறினார்.
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங் கூறுகையில், இந்த நாள் தேச அரசியலிலும் உத்தரப்பிரதேச அரசியலிலும் ஒரு மாற்றத்தைக் குறிக்கும் நாள் என்று குறிப்பிட்டார்.
இருந்தாலும், பா.ஜ.க., ஆர்.எல்.டி. இடையில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இன்னும் நேரமிருக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.