தேசிய இலவச பிரசவத் திட்டம் தொடக்கம்

புதன், 1 ஜூன் 2011 (19:13 IST)
கர்ப்பிணிகளுக்கான தேசிய இலவச பிரசவத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கி வைத்தார்.

அரசு சுகாதார நிறுவனங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம், இலவச மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கும் இந்த தேசிய அளவிலான திட்டம், ஹரியானா மாநிலம் மீவத் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

நூஹ் மண்டல மாண்டி கேடா கிராமத்தில் அல்-ஆபியா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு "ஜனனி சிசு சுரக்ஷா கார்யாகரம்" என பெயரிடப்பட்டுள்ளது.

பிரசவ இறப்புக்களைத் தடுக்கும் முயற்சியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மருந்துகளும், மருத்துவப் பரிசோதனைகளும் இலவசமாகவே ஏற்பாடு செய்யப்படும்.

பெரிய மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் பரிந்துரைக்கப்பட்டால் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.

குழந்தை பிறந்த 30 நாட்களில் அதற்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கான செலவையும் இந்தத் திட்டத்தின் மூலம் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்