தெ.தேசம் எம்.எல்.ஏ.க்கள் மீது மாணவர்கள் தாக்குதல்

வியாழன், 24 டிசம்பர் 2009 (18:17 IST)
உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீது மாணவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, கார்களையும் அடித்து நொறுக்கினர்.

தெலங்கானா தனி மாநில பிரச்னை தொடர்பாக, தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்த தெலுங்கு தேசம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜனார்த்தன ரெட்டி, தனது ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.

தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு, மாணவர்களிடம் தனது ஆதரவை தெரிவிப்பதற்காக காரில் வந்த அவர் மீது, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

அவர் மீது மட்டுமல்லாது, அவருடன் வந்த அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான தயாகர் ராவும் தாக்கப்பட்டார். அத்துடன் அவர்கள் வந்த காரும் கல்வீசி தாக்கப்பட்டது.

தாங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவது குறித்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், அவர்கள் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளர் குற்றம்சாற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்