தெலங்கானா உருவாக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்: சந்திரசேகர ராவ் வலியுறுத்தல்

திங்கள், 4 ஜனவரி 2010 (19:08 IST)
தெலங்கானா பற்றி விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், தெலங்கானா உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இநதிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதனை இன்று டெல்லியில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், “தெலுங்கானா உருவாக்கும் விடயத்தில் மத்திய அரசு தனது கொள்கையை அறிவித்துள்ளது. அதனை பின்பற்றி தெலுங்கானா உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பணிகளை மத்திய அரசு துவக்க வேண்டும்.

தெலுங்கானா உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும” என்றார்.

தெலுங்கானா உருவாக்குவதற்கு காலக்கெடு எதுவும் இருப்பதாக கருதுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை 15 மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் உருவாவதற்கு எவ்வளவு காலம் பிடித்ததோ அதே அளவு கால அவகாசம் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதிலும் ஏற்படும” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்