திகார் சிறைச்சாலை ஈட்டிய ரூ.15.25 கோடி

வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (11:22 IST)
திகார் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இனிப்புகள், மரச்சாமான்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதன்படி, 2011-ஆம் ஆண்டு தயாரித்த பொருட்களை விற்பனை செய்து, டெல்லி திகார் சிறை ரூ.15.25 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஈட்டிய வருவாய் ரூ.13 கோடியாகும். டி.ஜே. (திகார் ஜெயில்) என்ற பெயரைக் கொண்டு விற்கப்படும் இப்பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். திகார் சிறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் பல்வேறு பொருட்காட்சிகளிலும், வர்த்தக கண்காட்சிகளிலும் இடம்பெறுகின்றன.

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் திகார் தயாரிப்புகள் ரூ.4.45 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளன. வரும் நிதியாண்டில் கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மூலம் ரூ.29 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திகார் ஜெயிலில் சுமார் 12,000 கைதிகள் உள்ளனர். இடவசதியுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்