தாலிபான்களால் கடத்தப்பட்ட 2 சீக்கியர்கள் உயிருடன் மீட்பு

திங்கள், 1 மார்ச் 2010 (16:57 IST)
தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்ட சீக்கியர்கள் இரண்டு பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பகுதியிலிருந்து, சுர்ஜித் சிங், குர்விந்தர் சிங், ஜஸ்பால் சிங் மற்றும் மஹால் சிங் ஆகிய நான்கு பேர் தாலிபான்களால் கடத்தி செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டுமானால் பிணைத் தொகை தரப்பட வேண்டும் என தாலிபான்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால் தாலிபான்கள் விதித்த 'கெடு' முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜஸ்பால் சிங் மற்றும் மஹால்சிங் ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம் தாலிபான்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தாலிபான்களின் பிடியில் மீதமுள்ள சுர்ஜித் சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரண்டு பேரையும் மீட்க பாகிஸ்தான் இராணுவம் களத்தில் குதித்தது.

கைபர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக அவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்