முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணையைக் கட்டுவது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
டெல்லி வந்த கேரள முதலமைச்சர் சாண்டியிடம், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த உம்மன் சாண்டி, எங்களைப் பொருத்த வரை தமிழகத்துக்குத் தண்ணீர் தர வேண்டும் என்பதை மறுக்கவில்லை. அதே சமயம், கேரள மக்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது.
கேரள மக்களின் பாதுகாப்புக்காகதான் புதிய அணையை கட்ட வேண்டும் என்கிறோம். முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 117 ஆண்டுகளாகின்றன. மிகவும் பழமையான தொழில்நுட்பத்தின் மூலம் அந்த அணை கட்டப்பட்டுள்ளது.
புதிய அணை கட்டப்பட்டால் அது தங்களது நலனுக்கு எதிரானது என தமிழகம் கருதுவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை அதிகம் என்பதை அறிவோம். அவர்களுக்குத் தண்ணீர் தர நாங்கள் மறுக்கவில்லை.
இது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்துக்குத் தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு என்பதே எங்களது கொள்கை என்று உம்மன் சாண்டி கூறினார்.