டி.ஆர்.எஸ் தலைவர், 8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

வியாழன், 24 டிசம்பர் 2009 (13:13 IST)
தெலங்கானா குறித்த விஷயத்தில் மத்திய அரசு நேர்மாறான நிலையை எடுத்திருப்பதைத் தொடர்ந்து, டி.ஆர்.எஸ் தலைவர் கே. சந்திர சேகரராவ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, அவரது கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை விட்டு விலகியுள்ளனர்.

சந்திரசேகர ராவ் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மெஹபூப் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு நேற்றிரவு அனுப்பி வைத்தார். 8 எம்.எல்.ஏ.க்களும் நேற்றிரவு தங்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர்.

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் விவகாரத்த்தில் மத்திய அரசு டி.ஆர்.எஸ். கட்சியின் முதுகில் மத்திய அரசு குத்திவிட்டதாக அதன் மூத்த எம்.எல்.ஏவான டி. ஹரிஷ் ராவ் கூறினார்.

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் விவகாரம் குறித்து போராட்டம் நடத்துவதற்காக டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்சிகளின் கூட்டம் விரைவில் கூடி தங்களின் எதிர்காலத் திட்டம் குறித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்