சோனியாவைச் சந்தித்தார் பவார்

வியாழன், 14 மே 2009 (17:43 IST)
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து தலைநகர் டெல்லியில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இதனால், மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு லாலு, பாஸ்வானின் ஆதரவை சோனியாவின் தூதராக பவார் கோரியிருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பவாரை பிரதமராக முன்னிறுத்துவதற்கு இருவேறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அவர், நேற்றிரவு சோனியா காந்தியை சந்தித்து சுமார் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தியதாக யுபிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லாலு பிரசாத் மற்றும் பாஸ்வானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சியாக உருவெடுக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்