குடிபோதையில் ஆபாசப்படம் பார்த்தபிறகு சிறுமி கற்பழிப்பு - விசாரணை தகவல்கள்

செவ்வாய், 23 ஏப்ரல் 2013 (13:38 IST)
FILE
டெல்லியில் 5 வயது சிறுமி 2 நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகாரை சேர்ந்த மனோஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய மனோஜ், சிறுமியை தான் துன்புறுத்தவில்லை என்றும், தனது நண்பர் பிரதீப் (19) தான் இக்கொடூரத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

இதைதொடர்ந்து போலீசார் பிரதீப்பையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி மனோஜின் காந்திநகர் அறையில் இவர்கள் இருவரும் மது அருந்தியப்படியே ஆபாசப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்ததால், சுய நினைவின்றி வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை சாக்லெட்டை காண்பித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல மணி நேரம் ஆன பிறகும் 5 வயது சிறுமி கண்விழிக்காததால் அவளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட திட்டமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தகவல் தெரிவித்த காவல் துறை அதிகாரி ஒருவர், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதீப், தான் செய்தது மிகப் பெரிய குற்றம் என கூறியதாகவும்,இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளி ஒருவர் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் மனோஜை போலவே பிரதீப்பும் திகார் சிறையில் அடைக்கபடவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்