காவல்நிலையங்கள் நெட்வோர்க் மூலம் இணைப்பு - ப. சிதம்பரம்

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (16:47 IST)
நாடு முழுவதும் உள்ள 16 ஆயிரம் காவல் நிலையங்களை ஒரே நெட்வொர்க்கின் கீழ் இணைப்பதற்கான 2 ஆயிரம் கோடி ரூபாயிலான திட்டம் வரும் 2011-12ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, பயங்கரவாத சவால்களை முறியடிப்பது ஒரே குடையின் கீழ் (single network) கொண்டு வரப்படும் என்று புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அமைச்சர் கூறினார்.

எம்.என்.ஐ.சி எனப்படும் பல்நோக்கு அடையாள அட்டை அடுத்த ஆண்டில் சுமார் 11 கோடி பேருக்கு வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

குற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்டறியும் நெட்வொர்க் மற்றும் முறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய ப. சிதம்பரம், இந்த முறையில் 16 ஆயிரம் காவல்நிலையங்கள் கணினி மூலம் இணைக்கப்படும் என்றார்.

இவற்றில் எந்தவொரு காவல்நிலையமும், மற்ற காவல்நிலையங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய மத்திய அரசுடன் அனைத்து மாநில அரசுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் ப. சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்