கற்பழிப்பு குற்றவாளியுடன் 80 முறை மொபைலில் பேசிய கான்ஸ்டபிள்

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2013 (17:19 IST)
FILE
மும்பை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள ஒரு நபருடன் போலீஸ் ஒருவர் தொலைபேசி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

மும்பையில் பெண் பத்திரிக்கையாளரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இக்கொடூரத்தை செய்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபருடன் காவல் துறையை சேர்ந்தவர் ஒருவர் தொலைபேசி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

வேலை நிமித்தமாக ஒரு பழமையான கட்டிடத்திற்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், மும்பை குற்றப்பிரிவில் கான்ஸ்டபிளாக பணிப்புரியும் சலீம் முஜாவர் என்பவர், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பன்காளியை கடந்த மாதம் இறுதி முதல், சம்பவம் நடந்த அன்று இரவு வரை 80 முறை மொபைலில் தொடர்பு கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது தெரிந்த உடனேயே, கான்ஸ்டபிள் முஜாவர், பன்காளியை மொபைலில் தொடர்பு கொண்டு, என்எம் ஜோஷி மார்க்கில் உள்ள குற்றப்பிரிவு அலுவகத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட பன்காளி, அவரது வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். முஜாவர் சந்தேகத்தின் பேரில் பன்காளியை அழைத்ததே அவர் தப்பியோட காரணம் என சில போலீசார் தெரிவித்தனர்.

முக்கிய குற்றவாளியான இவரை ஞாயிற்றிக்கிழமை அன்றுதான் போலீசாரால் கண்டுப்பிடிக்க முடிந்தது.

இதுகுறித்து தெரிவித்த சிலர், பன்காளி மீது ஏற்கனவே 4 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரை ஏற்கனவே முஜாவர் கைது செய்துள்ளார். பாலியல் பலாத்காரம் குறித்த தகவல் அறிந்தவுடன் முஜாவருக்கு பன்காளி மீது சந்தேகம் வந்துள்ளது, இதனால்தான் அவர் குற்றவாளியை மொபைல் மூலம் தொடர்புகொண்டார் எனக் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்