கருப்புப் பணம் வரி விதிப்பிற்கு உட்பட்டதே: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

புதன், 9 பிப்ரவரி 2011 (16:27 IST)
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அயல் நாட்டு வங்கிகளின் இரகசியக் கணக்குகளில் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் அனைத்தும் வரி விதிப்பிற்கு உட்பட்டதே என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசின் வழக்குரைஞர் நீதிபதிகளிடம் விளக்கினார்.

வரி ஏய்ப்பு செய்த இந்தியர்கள் கருப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள வங்கிகள் இருக்கும் 10 நாடுகளுடன், வரி விதிப்பு விவரங்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தங்களை (Tax Information Exchange Agreement - TIEA) அரசு கையெழுத்திட்டுள்ளது என்றும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெறப்படும் விவரங்களைக் கொண்டு கருப்புப் பணம் வைத்திருப்போரின் விவரத்தை அறிந்து அவர்களிடம் அதற்கான வரி விதிப்பு நேரடி வரி விதிப்பு விதிமுறைகளின் படி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரி விதிப்பு விவரங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தங்கள் பஹாமாஸ், பெர்மூடா, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், மான் தீவுகள், கேமேன் தீவுகள், பிரிட்டிஷ் ஜெர்சி தீவுகள், மோனாகோ, செயிண்ட் கிட்டிஸ் - நேவிஸ், அர்ஜெண்டினா, மார்ஷ்ல் தீவுகள் ஆகிய அரசுகளுடன் ஒப்பநதம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்