ஊழலால் இயங்கும் நாடாக சித்தரிக்காதீர்கள்: பிரதமர் வேண்டுகோள்

புதன், 16 பிப்ரவரி 2011 (12:30 IST)
FILE
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாற்றுகள் அரசுக்கு எதிராக இருந்தாலும், அதற்காக நமது நாட்டை ஊழலால் இயங்கும் நாடாக சித்தரிக்காதீர்கள் என்று ஊடகங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொண்டுவரும் பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள், பொருளாதார நிலைமை ஆகியன குறித்து பேச நாட்டின் முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை தனது இல்லத்தில் சந்தித்தார்.

தனது அரசு எதிர்நோக்கியுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்துப் பேசிய மன்மோகன் சிங், நமது நாட்டின் அரசு நிர்வாகத்தை முடங்கச்செய்யும் இப்படிப்பட்ட ஊழல்களை வெளிக்கொணவதில் ஊடகங்களை தங்களது கடமையைச் செய்துள்ளன என்றும், அதனை தான் பாராட்டுவதாகவும் கூறினார்.

“ஊழல்களை வெளிப்படுத்தும் கடமையை செய்யும் அதே நேரத்தில், நமது நாட்டை ஊழலால் இயங்கும் நாடு என்று சித்தரித்து விடாதீர்கள், அது நமது மக்களின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும்” என்று கூறிய மன்மோகன் சிங், அப்படிப்பட்ட சித்தரிப்புகள் நமது நாட்டை பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறினார்.

“நாங்கள் நல்லாட்சியைக் கொடுப்பதற்காகவே இருக்கிறோம். நான் ஒன்றும் பலவீனமான வாத்து அல்ல, நல்ல நிர்வாகத்தை கொடுப்பதற்கே ஆட்சியில் இருக்கிறோம். முன்னேற்றத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதே எங்களது ஆட்சிமையின் குறிக்கோள்” என்று கூறிய பிரதமர், “ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள யாராக இருந்தாலும் அவர்களை நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று உறுதியாகக் கூறினார்.

பொருளாதாரம் உறுதியாக உள்ளது

நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடு அளவிற்கு உள்ளது. பணவீக்கம் அடுத்த மாதத்திற்குள் 7 விழுக்காட்டிற்கு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆயினும் பணவீக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்