ஹைதராபாத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

சனி, 3 ஏப்ரல் 2010 (15:01 IST)
பழைய ஹைதராபாத் நகரில் கடந்த ஒரு வார காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டது.

பழைய ஹைதராபாத் நகரில் கடந்த சனிக்கிழமையன்று, இரு பிரிவு மதத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்ததையடுத்து அதில் 2 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நகரின் பல இடங்களிலும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று நான்காவது நாளாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளானார்கள்.அத்துடன் மக்களும் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்க முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காவல்துறை உயர் அதிகாரிகள் கூடி ஊரடங்கு நிலையை தளர்த்துவது குறித்து ஆலோசித்தார்கள்.

இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை பழைய ஹைதராபாத்தில் 17 காவல்துறை சரகங்களுக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

மற்ற இடங்களிலும் சட்டம் ஒழுங்கு நிலைமை சுமூகமாக மாறி வருவதால் நாளை மேலும் கூடுதலான பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ளதாக காவல்துறை ஆணையர் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்