கோவிலுக்குள் சாக்ஸ் அணிந்து சென்ற ஷீலா தீட்சித் - பக்தர்கள் அதிர்ச்சி!

வெள்ளி, 14 மார்ச் 2014 (13:00 IST)
கேரள மாநில ஆளுநராக பதவியேற்ற முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்குள் சாக்ஸ் அணிந்து சென்றதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
FILE

கேரள ஆளுநராக இருந்த நிகில்குமார் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஷீலா தீட்சித் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 11 ஆம் தேதி அவர், ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினமே திருவனந்தபுரத்தில் ஷீலா தீட்சித்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் கேரளாவின் பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு நேற்று ஷீலா தீட்சித் சாமி கும்பிட சென்றார். கோவிலின் ஆசார விதிகள் படி ஆண்கள் வேட்டி அணிந்தும், பெண்கள் சேலையிலும் செல்ல வேண்டும். செருப்பு அணியாமல் வெறும் காலுடன் தான் சன்னதிக்குள் நுழைய வேண்டும்.

ஆனால் நேற்று கோவிலுக்கு சென்ற ஆளுநர் ஷீலா தீட்சித் காலில் ‘சாக்ஸ்’ அணிந்திருந்ததாக தெரிகிறது. சன்னதியில் இருந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கோவிலின் ஆச்சாரம் மீறப்பட்டு விட்டதாக புகார் கூறினர்.

இது தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பக்தர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். ஷீலா தீட்சித் ஆளுநர் பொறுப்பேற்ற 2 நாளிலேயே அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்