எம்.பி.க்களுக்கு லஞ்சம்: அமர்சிங்கிடம் காவல்துறையினர் விசாரணை

வெள்ளி, 22 ஜூலை 2011 (13:12 IST)
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் சமாஜவாதிக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான அமர்சிங்கிடம் டெல்லி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 3 பா.ஜனதா எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கியதாக அமர்சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பா.ஜனதா பிரமுகர் சுஹைல் இந்துஸ்தானி 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்துஸ்தானியும், அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவும் அமர்சிங்தான் லஞ்சம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக அமர்சிங்கை இன்று நேரில் வருமாறு டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.45 மணி அளவில் ஆஜரான அமர்சிங்கிடம், குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்