சிட்டி லைட்ஸ் - வாழ்வின் பேரதிசயம்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:11 IST)
சார்லி சாப்ளினின் கலை உச்சங்களில் ஒன்று சிட்டி லைட்ஸ். படத்தின் ஒரு ப்ரேம்கூட தேவையற்றது என ஒதுக்க முடியாத அளவுக்கு கச்சிதமான படைப்பு. அர்த்தமின்றி நகரும் வாழ்வின் பேரதிசயம் எதிர்பார்ப்பில்லாத அன்பில் மறைந்திருக்கிறது என்பதை கலாபூர்வமாக சொல்கிறது சிட்டி லைட்ஸ்.

webdunia photoFILE
சார்லி சாப்ளின் வீடில்லாத நகரத்தின் நாடோடி. ரொட்டிக்கான தினச‌ரி தேடுதல் வேட்டையில் ஒருநாள் தெரு ஓரம் பூ விற்கும் கண் தெ‌ரியாத இளம்பெண்ணை சந்திக்கிறார். சாப்ளின் ஒரு பணக்கார கனவான் என அந்தப் பெண் நினைக்கும்படி அந்த சந்திப்பு அமைந்து விடுகிறது.

அன்றிரவு தற்கொலைக்கு முயலும் செல்வந்தர் ஒருவரை சாப்ளின் காப்பாற்றுகிறார். தனது வீட்டிற்கு சாப்ளினை அழைத்துச் செல்லும் செல்வந்தர், இனி தற்கொலைக்கு முயல்வதில்லை என உறுதி அளிக்கிறார். இருவரும் சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஆட்டம் பாட்டத்துடன் அன்றிரவை கழிக்கிறார்கள்.

மறுநாள் செலவந்த‌ரின் வீட்டருகில் அந்த கண் தெ‌ரியாத இளம் பெண்ணை மீண்டும் சந்திக்கிறார் சாப்ளின். செல்வந்த‌ரின் கா‌ரில் அவளை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனிமையும், வறுமையும் நிறைந்த அவளின் வாழ்க்கை சாப்ளினுக்கு தெ‌ரிய வருகிறது.

இதனிடையில் செல்வந்தருடனான சாப்ளினின் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. போதையில் சாப்ளினுடன் நண்பராக அன்னியோன்யத்துடன் பழகுகிறவரால், போதை தெ‌ளிந்த பின் அதனை நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. சாப்ளினை வீட்டை விட்டு துரத்துகிறார். நமது நாடோடிக்கோ அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

பார்வையற்ற பெண் பல மாதங்களுக்கான வாடகை பாக்கி தர வேண்டியிருக்கிறது. இரண்டு நாளில் அதனை தர இயலாதபட்சத்தில் வீட்டை காலி செய்தாக வேண்டும். தனது ஏழ்மையை நினைத்து அழும் அவளை சாப்ளின் தேற்றுகிறார். கண் தெ‌ரியாதவர்களுக்கு பார்வை தரும் மருத்துவரை பற்றி பத்தி‌ரிகையில் வந்திருக்கும் செய்தியை படித்துக் காட்டும் அவ‌ர், வாடகை பணத்தை தானே தந்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்.

நமது நாடோடிக்கு இப்போது பணம் தேவை. அதிகமாக அதுவும் குறுகிய காலத்தில். குத்துச் சண்டை போட்டியில் தன்னுடன் மோதினால் ப‌ரிசுத் தொகையில் ச‌ரிபாதியை தந்து விடுவதாக கூறுகிறான் ஒருவன். நம்பிப் போனால் நிஜ குத்துச் சண்டை வீரனுடன் மோத வேண்டியதாகி விடுகிறது. அப்படியும் நம்பிக்கை இழக்காமல் இரவு நகரத்தை ரோந்து வரும் வேளையில் போதை செல்வந்தர் சாப்ளினை அடையாளம் கண்டு கொள்கிறார். வழக்கம்போல் வீட்டிற்கு அழைத்து செல்பவர் கண் தெ‌ரியாத பெண்ணின் சிகிச்சைக்கு ஆயிரம் டாலர் தருகிறார்.

அதேநேரம் செல்வந்த‌ரின் வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் திருடர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். போலீசை அழைக்கும் சாப்ளின் பணத்துடன் மாட்டிக் கொள்கிறார். செல்வந்தருக்கு சாப்ளினையோ, அவருக்கு பணம் கொடுத்ததோ நினைவில் இல்லை. சாப்ளினை திருடன் என முடிவு செய்கிறது போலீஸ். அவர்களிடமிருந்து பணத்துடன் தப்பிக்கிறார் சாப்ளின். கண் தெ‌ரியாத பெண்ணிடம் பணத்தை ஒப்படைத்து திரும்பும் வழியில் சாப்ளினை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

கிழிந்த உடையும், கலங்கிய மனதுமாக இப்போது சாப்ளின் ஒரு பிச்சைக்காரனுக்கு‌ரிய தோற்றத்தில் இருக்கிறார். தெருவில் நடந்துவரும் அவரை சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். சுற்றிலும் உள்ளவர்கள் ப‌ரிகாசத்துடன் சி‌ரிக்கிறார்கள். வேதனையுடன் திரும்பும் சாப்ளின் அப்படியே நின்றுவிடுகிறார். அவர் முன்னால் அந்த பூ விற்கும் பெண். அவளது தோற்றம் இப்போது சீமாட்டியைப் போல் மாறியிருக்கிறது. இப்போது அவள் தெருவில் பூ விற்கவில்லை. அவளுக்கென்று சொந்தமாக கடை இருக்கிறது.

சாப்ளினை பிச்சைக்காரன் என்று நினைக்கும் அவள், அவருக்கு பணம்தர முயல்கிறாள். சாப்ளின் வாங்க மறுக்கிறார். அவள் வலுக்கட்டாயமாக அவரது கையை பிடித்து தரும்போது அந்த ஸ்ப‌ரிசம் அவர் யார் என்பதை அவளுக்கு உணர்த்திவிடுகிறது. கண்ணீர் மல்க காதலர்கள் பார்த்துக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது.

சாப்ளினின் அனைத்து திரைப்படங்களிலும் சமூக அவலங்களுக்கெதிரான விமர்சனத்தை காண முடியும். மனை திரைப்படத்தில் தெருவில் நடந்து வருவார் சாப்ளின். மாடியில் வசிப்பவர்கள் கொட்டும் குப்பை அவர் மீது விழும். மேலே பார்த்துவிட்டு நகர்ந்து செல்வா‌ர் சாப்ளின். சற்று தhரத்தில் வீதியின் ஓரம் குழந்தை ஒன்று அனாதையாக கிடக்கும். அதைப் பார்த்ததும் மேலே அண்ணாந்து பார்ப்பார். குப்பையை போல அந்த குழந்தை தெருவில் வீசப்பட்டிருப்பது அந்த மவுனமான ஒற்றை பார்வையில் வெளிப்படும்.

webdunia photoFILE
சிட்டி லைட்ஸ் படத்தின் முதல் காட்சியும் ஏறக்குறைய இப்படியொரு விமர்சனத்துடனே ஆரம்பமாகிறது. நகரத்தின் மேட்டுக்குடியினர் அமைதிக்காக திறக்கும் சிலையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார், சாப்ளின். அமைதிக்காக அவர்கள் திறக்கும் சிலையால் சாப்ளினின் இரவு தங்கும் இடம் பறிபோகிறது.

அதிகாரத்தை அது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பவர் சாப்ளின். அவரது படங்களில் போலீஸ்காரர்கள் அதிகாரத்தின் குறியீடாகவே காட்டப்படுகிறார்கள். ஹிட்லரை கண்டு உலகமே பயந்திருந்த நேரம், தி கிரேட் டிக்டேக்டர் படத்தில் ஹிட்லரை துணிச்சலாக விமர்சித்தவர் சாப்ளின். எந்திரமயமாகி வரும் உலகில் மனிதன் எந்திரங்களின் அடிமையாகும் அபாயத்தை விளக்குகிறது, மாடர்ன் டைம்ஸ்.

சிட்டி லைட்ஸில் சாலையை கடக்கும் சாப்ளின், மோட்டர் சைக்கிளில் இருக்கும் போலீஸ்காரரை தவிர்க்கும் பொருட்டு பக்கத்தில் நிற்கும் கா‌ரினுள் புகுந்து சாலையின் மறுபுறம் உள்ள நடைபாதைக்கு வருவார். அவர் கார் கதவை திறக்கும் சத்தத்தை வைத்தே அவர் ஒரு செல்வந்தர் என்ற முடிவுக்கு வருகிறாள் தெருவில் பூ விற்கும் அந்த கண் தெ‌ரியாத இளம் பெண்.

சாப்ளினின் திரைப்படங்களில் மனிதர்களின் உளவியல் துல்லியமாக சித்த‌ரிக்கப்பட்டிருக்கும். சிட்டி லைட்ஸில் செல்வந்த‌ரின் வேலைக்காரன் சாப்ளின் மீது சதா வெறுப்பை காட்டுகிறான். சமூக அந்தஸ்தில் தன்னைவிட தாழ்ந்த ஒருவனுக்கு பணிவிடை செய்ய நேர்ந்த சாமானியனின் வெறுப்பு அது.

அதேபோல் தெருவில் சாக்கடையை ச‌ரி செய்கிறவன் குழிக்குள் இருக்கும் போது அவனிடம் எதிர்த்து பேசும் சாப்ளின் அவன் வெளியே வந்ததும் அவனது உயரத்தைப் பார்த்து பின்வாங்குவார். எளியோனை வலியோன் அடக்க நினைக்கும் அனைத்து இடங்களிலும் பொருத்திப் பார்க்க தகுந்த காட்சி அது. நாம் மேலே பார்த்த காட்சிகள் அனைத்தும் படத்தில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்பவை என்பது முக்கியமானது.

சிட்டி லைட்ஸின் ஒவ்வொரு பிரேமையும் இப்படி தனித்தனியாக வியந்து சொல்ல இயலும். மேலும், நகரத்தின் நாடோடியான ஒருவனின் அர்த்தமில்லா வாழ்க்கையை எதிர்பார்ப்பில்லாத அன்பு அர்த்தம் மிகுந்ததாக்கி விடுவதையும் சொல்கிறது சாப்ளினின் இந்தப் படம்.

எதிர்பார்ப்பில்லாத அன்புதானே மானுட வாழ்வின் பேரதிசயம்.