காதலிக்கும் நபரை பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அந்த சந்திப்பு நிகழ்ச்சியைப் பற்றி முன்பு பார்த்தோம்.
அந்த சந்திப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி சில குறிப்புகளை இங்கு தருகிறோம்.
அதாவது காதலரை நமது வீட்டிற்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்யலாம். இது சரியானதுதான்.
ஆனால், இந்த சந்திப்பின்போது பெற்றோர் தங்களது வீட்டில் எந்த பிரச்சினையும் இன்றி இயல்பாக இருப்பார்கள். ஆனால் உங்கள் காதலருக்குத்தான் புதிய இடம் எனவே அவர் கொஞ்சம் திணறித்தான் போவார்.
எனவே இந்த சந்திப்பு கோயில், பூங்கா, பொது நிகழ்ச்சி நடக்கும் இடம் என இருவருக்கும் புதிய இடத்தில் அமைவது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தான் விரும்பியவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பெற்றோரிடமும், பெற்றோர் எதிர்த்தாலும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று காதலரிடமும் சந்திப்புக்கு முன்னதாகவே சொல்லிவிடுங்கள்.
உங்களது உறுதியான மனநிலையை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டால், இந்த சந்திப்பின்போது ஏதேனும் பிரச்சினை வருவதோ, எதிர்மறையான முடிவையோ தவிர்க்கலாம்.
நீங்கள் காதலிக்கும் நபரிடம் உங்கள் உறுதித் தன்மையை சொல்வதன் மூலம், அவர் உங்களது பெற்றோரை சந்திக்கும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவார். அதிகமான அச்ச உணர்வோ, பயமோ வார்த்தைகளில் தெரியாது.
சந்திப்பிற்கு முன்னதாகவே பரஸ்பரம் இருவரும் தொலைபேசியில் பேச வைத்து விடுவதும் சிறந்தது. அப்போதுதான் நேரடியான சந்திப்பின்போது அவர்கள் எளிதாகப் பேசிக் கொள்வார்கள்.
குடும்பப் பின்னணியைப் பற்றி இருவரும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது.
சந்திப்பின்போது ஒருவர் பக்கமாக இருந்து நீங்கள் எந்த பதிலையும் தெரிவிக்க வேண்டாம். அது நீங்கள் ஆதரவு தரும் பக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.
இருவரும் எனக்குத் தேவை என்பது போல் உங்கள் பேச்சு அமையட்டும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். எனவே முதல் சந்திப்பு ஒரு முழுமையான சந்திப்பாக அமையட்டும். சந்திப்பிற்கு என வெகு நேரம் ஒதுக்கி இரு தரப்பும் பேச அதிக நேரம் கொடுங்கள்.
எந்த போலியான வாக்குறுதிகளையும், விவரங்களையும் சந்திப்பின்போது சொல்ல வேண்டாம். அது தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.
இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இனிய காதல் தம்பதிகளாக வாழ வாழ்த்துகிறோம்.