கன்னியாஸ்திரியைக் கைப்பிடிக்கப் போராடும் காதலன்

நம்மூரில் எல்லாம் காதலித்து கர்பிணியாக்கிவிட்ட காதலனைக் கைப்பிடிக்க காதலி போராடுவதுதான் வழக்கம். ஆனால் இங்கே நிலைமை தலைகீழ். காதலிக்காக காதலன் போராட்டத்தைத் துவக்கியுள்ளான்.

இத்தாலி நாட்டில் அலாஸ்சியோ நகரைச் சேர்ந்த டேனியல் பிரைட்டர் (21) என்பவரும், அதே இடத்தைச் சேர்ந்த பேட்ரிசியா மசோரா என்ற பெண்ணும் வெகு நாட்களாகக் காதலித்து வந்தனர்.

இருவரும் சிறு வயதில் இருந்தே ஒருவருக்கு ஒருவர் நல்ல நண்பர்களாக இருந்து இளம் வயதில் காதலர்களாகக் கனிந்தவர்கள்.

ஆனால் இந்த காதலுக்கு திடீரென இப்படி ஒரு திருப்பம் வரும் என அந்தக் காதலன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான்.

அப்படி என்ன நேர்ந்துவிட்டது என்ற உங்களது கேள்விக்கு பதில் இதோ,

வயது மூத்த வயோதிகர்களே காதல் களியாட்டம் போடும்போது, காதலி பேட்ரிசியாவிற்கு திடீரென கன்னியாஸ்திரியாகி இறைவனுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அவ்வளவுதான், இருவருக்கும் அறிமுகமான ஒருவரிடம், "என்னை மறந்துவிடுமாறு டேனியலிடம் கூறி விடுங்கள்" என்று சொல்லிவிட்டு அவர் கன்னியாஸ்திரியாக மாறினார்.

சுமார் 300 மைல்கள் தொலைவில் உள்ள கன்னியாஸ்திரிகள் பள்ளியிலும் சேர்ந்துவிட்டார்.

இதை அறிந்த காதலன் டேனியலுக்கு பெரும் அதிர்ச்சி. கவலையில் தாடியெல்லாம் வைத்துக் கொண்டு சும்மா இருந்துவிடவில்லை.

உடனே கன்னியாஸ்திரிகள் பள்ளிக்குச் சென்றார். கான்வென்ட் முன்பு தனது காதலிக்காக போராட்டத்தைத் துவக்கினார். ஆனாலும் காதலனைப் பார்க்க பேட்ரிசியா மறுத்துவிட்டார். உன்னிடம் பேச வேண்டும் என்று வாசகம் எழுதிய பலகையையும் மற்ற கன்னியாஸ்திரிகள் உடைத்துவிட்டனர்.

டேனியலுக்கு அந்த ஊர் மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் பலரும் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்