விவாகரத்துகளுக்கு பெற்றோரே முக்கியக் காரணம்

தம்பதியரின் பெற்றோர்கள் அளிக்கும் தவறான அறிவுறைகளே பெரும்பாலான விவகாரத்துகளுக்கு காரணமாக அமைகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த திருமண அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் திருமண அமைப்பாளரும், நிபுணருமான எர்னஸ்ட் என்பவர் விவாகரத்து ஆவதற்கான காரணங்கள் பற்றி கூறுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

திருமணமான தம்பதிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றை அவர்களாகவே பேசி தீர்த்துக் கொள்ள முயல வேண்டும்.

அவர்களுக்குள் அதற்கான முதிர்ச்சியின்மை காரணமாக உணர்ச்சிவசப் படுவதாலும், உதாசீனப்படுத்துவதாலும் உறவில் சிக்கல் ஏற்படுகிறது.

தங்களது பெற்றோரிடம் எதிர் பாலரிடம் இருக்கும் குற்றத்தை மட்டுமே அடுக்குகின்றனர். பெற்றோர்களும் தங்களது பிள்ளையின் மீது இருக்கும் குறைகளைப் பார்க்கத் தவறி, அவர்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி விடுகின்றனர்.

எனவே தம்பதிகள் தங்களுக்குள் பிரச்சினையை தாங்களாகவே சரி செய்ய முயல வேண்டும். தங்களது பெற்றோர் அளிக்கும் தவறான ஆலோசனைகளை தவிர்க்க வேண்டும்.

விட்டுக் கொடுக்கும் போக்கும், தாராள மனப்பான்மையும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

திருமணம் என்பது பல பொறுப்புகளைக் கொடுக்கும். அவற்றை ஏற்றுக் கொள்ள, திருமண பந்தத்திற்குள் நுழையப் போகும் ஆணும், பெண்ணும் தயாராக இருக்க வேண்டும். பொறுப்புகளை தட்டிக் கழிப்பதோ, அதனை வெறுப்பதோ பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைகிறது.

குழந்தை பெறுவதிலும் தற்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றை தம்பதிகள் இருவரும் பேசி தங்களுக்கு ஏற்ற நல்ல முடிவை எடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மற்றவர்களது கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்