உச்சநீதிமன்றத்தில் ’குக்கர்’ வழக்கு ?– தினகரனின் கடைசி நம்பிக்கை !

திங்கள், 25 மார்ச் 2019 (09:58 IST)
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் அல்லது பொதுவான சின்னம் ஒன்றை வழங்குதல் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குக் கொடுக்க வேண்டுமென அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்களிடம் பல ஆண்டுகளாக அறிமுகமாகியிருந்த இரட்டை இலையையும், உதயசூரியனையும் புதியதாக வந்த டிடிவி தினகரனின் குக்கர் வீழ்த்தியது. எனவே தனக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த குக்கரை நிரந்தர சின்னமாக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.

அதனால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கவேண்டும் என்றும் தங்கள் கட்சியான அமமுகவுக்கு குக்கர் அல்லது ஏதேனும் ஒரு பொது சின்னத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்றும் கூறியிருந்தனர். அந்த வழக்கின் விசாரணை வந்தபோது தேர்தல் ஆணையம் ஆஜர் ஆகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து விடுமுறைக்குப் பிறகு இன்று உச்சநீதிமன்றம் இன்று தொடங்குகிறது.

நாளையுடன் தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் முடியும் தருவாயில் இன்று உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு வாயிலாக மட்டுமே அமமுக வின்  சின்னம் தொடர்பான பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பளிக்காவிட்டால் அமமுக தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்