பிரிங் அப் த பாடீஸ் - ஹிலாரி மான்டெலின் வரலாற்று நாவலுக்கு புக்கர் விருது!

புதன், 17 அக்டோபர் 2012 (13:37 IST)
FILE
பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் இரண்டாவது முறையாக நேற்று மிக உயர்ந்த இலக்கிய விருதான புக்கர் விருதைப் பெற்றார். அவர் எழுதிய ரத்தத்தை உறைய வைக்கும் பிரிங் அப் த பாடிஸ் (உடல்களைக் கொண்டு வா) 2012ம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

82,000 டாலர் மதிப்புள்ள புக்கர் விருதை கடந்த 2009ம் ஆண்டு வுல்ப் ஹால் (ஓநாய் அறை) என்ற நாவலுக்காக முதல் முறையாகப் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.

வுல்ஃப் ஹால் என்ற நாவலின் தொடர்ச்சியாகவே இந்த நாவலும் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் பணடைய அரசரான 8ஆம் ஹென்றியின் தாமஸ் குரோம்வெல் என்ற அமைச்சரின் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றிய வரலாற்று கதையமைப்பைக்கொண்ட நாவல்களாகும் இவை.

வுல்ஃப் ஹால் முடிந்த இடத்திலிருந்து 'பிரிங் அப் த பாடீஸ்' தொடங்குகிறது. வுல்ஃப் ஹாலில் அரசரும் அவரது அந்தரங்க செயலருமான குரோம்வெல் செய்மூர் குடும்பத்தினரின் விருந்தினர் ஆவர். அரசர் தனது அந்தரங்க கணங்களை ஜேன் செய்மூரிடம் பகிர்ந்து கொள்கிறார். மெல்ல செய்மூரை காதலிக்கவும் தொடங்குகிறார்.

அரசரது மனைவியான ராணி ஆனி போலீன் ஒரு ஆண்வாரிசை உருவாக்குவதில் தோல்வி அடைகிறாள். மேலும் ராணி பாதை மாறிச் செல்வதும் அரச குடும்பத்திற்கான விசுவாசத்திலிருந்து தடம் புரண்டு செல்வதான வதந்திகள் தலை தூக்க அரசர் புதிய உற்வை நாடுகிறார்.

குரோம்வெல் இதனைப் பயன்படுத்தி ராணியை அரசவையிலிருந்து வெளியேற்ற திட்டமிடுகிறார். 8ஆம் ஹென்றியின் ஆலோசனையின் பேரில்தான் குரோம்வெல் இந்த சதிவலையைப்பின்னுகிறார். ஹென்றியின் காதலி செய்மூர் இதன் விளைவுகளின் முடிவையும் தனது திருமணத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.

ஆனால் ராணி ஆனி போலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த சதிவலையில் எளிதில் விழுவதாக இல்லை. அவ்ர்கள் போராட முடிவெடுக்கின்றனர்.

ஆனியின் முடிவை முறியடிக்க டியூடர் (இங்கிலாந்தில் 1485 முதல் 1603 வரை ஆட்சி செய்த மன்னர் மரபு) வம்சாவளியின் அரசியல் எதிரிகளான போப்பாண்டவரை ஆதரிக்கும் ரோமன் கத்தோலிக்க உயர்குடியினரான பாபிஸ்ட்களின் ஆதரவை சேகரிக்கிறார் குரோம்வெல்.

8அம் ஹென்றியிற்கும், இங்கிலாந்து டியூடர் அரச மரபுக்கும் ராணி ஆனி போலின் செய்த 'துரோகம்' பற்றிய விசாரணை மற்றும் மிகவும் கொடூரமாக அவரின் தலையை வாங்கும் ச்திவலைப்பின்னலையும் மிகவும் சுவாரசியமாக விளக்கும் இந்த நாவலுக்கு தற்போது புக்கர் விருது கிடைத்துள்ளது.

இதன் மூன்றாம் பகுதி "தி மிரர் அண்ட் தி லைட்". இதில் குரோம்வெலின் வீழ்ச்சியும் 1540ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை கிடைப்பதும் கதையாக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்