உச்ச நட்சத்திரத்தின் ‘பலே’ கணக்கு

வியாழன், 11 மே 2017 (16:31 IST)
இலங்கை நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ளார் உச்ச நட்சத்திரம். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிரமாண்ட இயக்குநர். ‘கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கித்தான் ஆகணும்’ என்பது போல, ஒரு படத்தில்  நடிக்க ஒப்புக் கொண்டால், அந்தப் படம் ரிலீஸாகும்வரை தயாரிப்பாளர் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.  இல்லையென்றால், ரிலீஸில் சிக்கலை உண்டாக்கி, நடிகர்களின் சினிமா வாழ்க்கையில் கரும்புள்ளியை ஏற்படுத்தி விடுவார்கள்.

 
இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமும், இலங்கையில் தமிழர்களுக்காகத் தாங்கள் கட்டியுள்ள வீட்டைத் திறக்க உச்ச நடிகரை  அழைத்தது. வேறு யாராவது அழைத்திருந்தால் அவர் மறுத்திருப்பார். ஆனால், அழைத்தது தயாரிப்பு நிறுவனமாச்சே… தள்ளாத  வயதில் தான் நடித்த படத்துக்கு சிக்கல் வந்துவிட்டால் என்னாவது? எனவே, வர சம்மதித்தார்.
 
ஆனால், தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சிலர் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.  பயந்துபோன உச்ச நட்சத்திரம், இலங்கை செல்லும் முடிவைக் கைவிட்டார். இதனால் தயாரிப்பு தரப்புக்கும், உச்ச  நட்சத்திரத்திற்கும் இடையே சிறிய மனத்தாங்கல்.
 
அந்த மனத்தாங்கலை, எளிதாக நிவர்த்தி செய்துவிட்டார் உச்ச நட்சத்திரம். எப்படி என்கிறீர்களா? அந்த இலங்கை நிறுவனம், சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே ஒரு மருத்துவமனையைக் கட்டியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்த மருத்துவமனையை, சேவை செய்வதற்காகவே அவர்கள் கட்டியுள்ளார்களாம். அந்த மருத்துவமனையை, தன் மனைவி சகிதம்  சென்று திறந்து வைத்திருக்கிறார் உச்ச நட்சத்திரம். அப்புறமென்ன, கூட்டிக் கழித்துப் பார்த்ததில், கணக்கு சரியாக வந்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்