வேலையில்லாதவர்களுக்கு பயிற்சியளிக்க மைக்ரோசாஃப்ட் முடிவு

புதன், 15 ஏப்ரல் 2009 (18:33 IST)
வாஷிங்டனில் வேலையில்லாமல் தவித்து வரும் மென்பொருள் பட்டதாரிகள் 30 ஆயிரம் பேருக்கு அடுத்த 90 நாட்களில் பிரத்யேக மென்பொருள் பயிற்சி பெற உதவும் ரசீதுகள் வழங்கப்படும் என முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் ரசீதுகளைப் பயன்படுத்தி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களில் மென்பொருள் துறை குறித்த படிப்புகளை பிரத்யேகமாகப் கற்றுக் கொள்வதுடன், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்தும் தேர்வுகளையும் குறைந்த கட்டணம் அல்லது கட்டணமின்றி எழுத முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

சியாட்டில் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆளுநர் கிரிஸ் கிரிகோரி, பொருளாதாரச் சரிவால் பல மென்பொருள் வல்லுனர்கள் பணியிழந்துள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த பயிற்சித் திட்டம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக அமையும் எனப் பாராட்டினார்.

வாஷிங்டன் உள்ள பயிற்சி மையங்கள், மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் மென்பொருள் பயிற்சி பெற உதவும் ரசீதுகள் கடந்த திங்கட்கிழமை முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்