மார்ச் 3 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலிழப்பு

வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (16:23 IST)
கணிப்பொறிகளின் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மெசேஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3 ஆம் தேதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
FILE

விண்டோஸ் போன் 8 கருவிகளில் ஃபேஸ்புக் மெசேஞ்சர் அறிமுகப்படுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்ததற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். கணிப்பொறிகளில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது வலது பக்கத்தில் மெசேஞ்சர் காணப்படும். மொபைல் போன்களில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் தகவல்கள் பக்கத்திற்கோ அல்லது ஃபேஸ்புக் மெசேஞ்சர் என்ற மொபைல் சேவையைத் தரவிறக்கம் செய்தோ தகவல்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும்.

தற்போது மொபைல் கருவிகள் மூலமாக ஃபேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதில் கவனம் செலுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் கணிப்பொறி விண்டோஸ் மூலமாக ஃபேஸ்புக் மெசேஞ்சர் பயன்படுத்துவது நிறுத்தப்படுகிறது. ஃபயர்ஃபாக்ஸ் இயங்கு முறையிலும் ஃபேஸ்புக் மெசேஞ்சர் நிறுத்தப்படுகிறது.

எனினும் தகவல் பக்கங்களுக்குச் சென்று தகவல்களைப் பறிமாறிக்கொள்ளலாம். அனைத்து தகவல்களையும் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்