செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை: இனி இல்லை ‘மிஸ்ட்-கால்’ தொல்லை

வெள்ளி, 19 ஜூன் 2009 (18:15 IST)
அறிவியல் வளர்ச்சியின் பயனாக செல்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.

இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார்.

தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார்.

பொதுவாக, டிஸ்கோதே, பார் உள்ளிட்ட அதிக சப்தம் நிறைந்த இடத்தில், செல்போன் அழைப்பு வந்தால் அது சம்பந்தப்பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு மிஸ்டு கால் ஆகிவிடுவதுண்டு.

சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார் ஜியோர்ஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்