எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய 41 எம்.பி. கேமரா போன்

திங்கள், 8 ஜூலை 2013 (19:24 IST)
FILE
செல்போனில் உலகத்தையே அடக்கும் விஷயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி வெளிவர இருக்கும் 41 மெகாபிக்ஸல் கேமராவுடன் கூடிய செல்போன் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. 'ஈ.ஓ.எஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிற புதிய நோக்கியா லூமியா மாடலின் பிரதான அம்சம், சூப்பர் ஹை ரெசொல்யூஷன் 41 மெகாபிக்ஸல் கேமரா ஆகும்.

இவ்வளவு துல்லியமான கேமரா இதுவரை செல்போனில் இடம் பெற்றதில்லை என்கிறார்கள். தவிர இந்த செல்போன், இதுவரை வெளியானதிலேயே மிகச்சிறந்த 'சூம்' கேமரா வசதியைப் பெற்றிருக்குமாம்.

FILE
இதன் மூலம் மிகச்சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று செல்போன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஏழு பிக்ஸல்கள் வரை ஒன்றாக சேர்க்க முடியும் என்பதால், மற்ற செல்போன் கேமராக்களால் எடுக்கப்படும் படங்களில் உள்ள குறைபாடு இதில் இருக்காது என்கிறார்கள். ஏற்கனவே லூமியா 920, லூமியா 928 கேமராக்கள் பியூர் வியூ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் கேமராக்கள் 8.7 மெகாபிக்ஸல் திறன் கொண்டவைதான்.

இந்நிலையில், இந்த புதிய படைப்பை உலகம் முழுவதும் செல்போன் பிரியர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற மாதிரி புதிய போன் இருக்குமா என்பது, அது அறிமுகமான பின்புதான் தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்