ஊரகப் பகுதிகளில் கணினிக் கல்வி : இண்டல் திட்டம்!

Webdunia

வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (18:19 IST)
கணினிக் கல்வியை இந்தியாவின் கிராமங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லும் திட்டத்துடன் செயல்படப் போவதாக இண்டல் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது!

இண்டல் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராமமூர்த்தி சிவகுமார் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கணினி ஹார்ட்வேட் துறையின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உயர் கல்விக்கு உந்துதல் அளிக்க கணினிக் கல்வியை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல இண்டல் திட்டமிட்டுள்ளதென கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு 500 கோடி டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்துடன் பெங்களூருவில் இண்டல் மேம்பாட்டு மையத்தை துவக்கிய இண்டல் நிறுவனம், இந்தியா சர்வதேக அளவில் கணினிக்கான முக்கிய சந்தையாய் உருவெடுத்துவரும் நிலையில், மேலும் முதலீடு செய்ய தங்களது நிறுவனம் தயாராகவே உள்ளது என்று சிவகுமார் கூறியுள்ளார்.

பெரும் சந்தை மட்டுமின்றி, இந்தியாவின் அதிக திறன் வாய்ந்த மனித சக்தியும் தங்களது எதிர்கால திட்டத்திற்கான அடிப்படையைத் தந்தது என்று கூறிய சிவகுமார், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை ஐ.டி.சி. மேற்கொண்டு வருவதாகக் கூறினார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்