ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன், இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுகின்றது.
அந்த நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. ஏனெனில் ஆசைப்படும் பொருள்களையெல்லாம் உண்பதென்பது மெய் மறதியை உண்டாக்கும். சிலநேரம் இதயத்தையே இறுகச் செய்து விடும். சத்தியத்தை விட்டும் இதயத்தைக் குருடாக்கி விடும்.
நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.
நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன்பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும்.
ஏனெனில், மனித மனம் தீயதை அதிகம் நாடக் கூடியதாக இருக்கின்றது. எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவர்களது மனதைத் தவிர, மனிதன் தனது மனதின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி, அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின்பால் - உயர்ந்த குறிக்கோளின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்லவும் முடியும்.
webdunia photo
WD
நோன்பானது, மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், பெண்ணிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன.
இதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழிகள் தானா என்று கூட அவன் பார்ப்பதில்லை. இவையே இந்த மனிதனது இம்மை, மறுமை அழிவிற்குக் காரணமாகி விடுகின்றது. அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் ஆவார்.