புதினா சப்பாத்தி

புதன், 19 ஜனவரி 2011 (16:58 IST)
தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
புதினா கீரை - 2 கப்
கொத்துமல்லி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவில் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும்.

புதினாவையும், கொத்துமல்லியையும் நன்றாக அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயையும் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நெய் விட்டு முதலில் சீரகம் போட்டு பொரித்து, பின்னர் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்துமல்லியை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு மணி நேரம் ஊறவைத்த மாவை தேவையான சப்பாத்தி அளவில் உருட்டிக் கொள்ளவும்.

ஒரு சப்பாத்தி மீது வதக்கி வைத்துள்ள புதினா கலவையைப் தேவையான அளவு இட்டு அதன் மீது மற்றொரு சப்பாத்தி வைத்து முனைகளில் ஒட்டவும்.

மீண்டும் இதனை லேசாக உருட்டிக் கொள்ளவும்.

இதுபோன்று தேவையான அளவு தயார் செய்து வைத்துக்கொண்டு நன்கு காய்ந்த கல்லில் போட்டு இருபுறமும் நன்கு வேக வைக்கவும்.

சப்பாத்தி சடும்போது நெய் விட்டு சுட்டால் மேலும் சுவையாக இருக்கும்.

அவ்வளவுதான் குருமா தேவைப்படாத, சத்துள்ள பு‌தினா சப்பாத்தி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்