தீவுத்திடலில் வெப்ப காற்றழுத்த பலூ‌ன்

செவ்வாய், 18 மே 2010 (12:00 IST)
தீவுத்திடலில் நடைபெற்று வரும் கோடைக்கால திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வெப்ப காற்றழுத்த பலூனில் பயணம் என்ற விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கோடைக்கால விடுமுறையையொட்டி சென்னை நகர மக்களின் வசதிக்காக சென்னை தீவுத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 31-ந் தேதி முதல் கோடைக்கால திருவிழா என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

கடந்த 15 நாட்களாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தீவுத்திடலுக்கு வருகை தந்துள்ளனர். பொது மக்களை ஈர்ப்பதற்காக தற்போது வெப்ப காற்றழுத்த பிரமாண்ட பலூன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹீலியம் காற்றை கொண்டும் இயங்கும் இந்த பலூனில் 3 பேர் ஏறி பயணம் செய்யலாம். இந்த பலுன் 15 அடி நீளமாகும். 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க கூடிய இந்த பலூன் தீவுத்திடலில் 100 அடி உயரத்துக்கு பறக்க விடப்படுகிறது.

வெப்ப காற்றழுத்த பலூனை இயக்குவதற்காக ஜெர்மனியை சேர்ந்த நிபுணர் ஒருவர் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பலூனில் பயணம் மேற்கொள்பவர்கள் 100 அடி உயரத்தில் இருந்து அழகு சென்னையை கண்டு ரசிக்கலாம். சுமார் 10 நிமிடம் வானில் மிதந்து சென்னையை காண்பதற்கு பயணிகளிடம் இருந்து நபர் ஒன்றுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான ஒத்திகை மற்றும் தொடக்க நாள் நேற்று தீவுத்திடலில் நடைபெற்றது.

பொதுவாக இந்த பலூனில் பறப்பதற்கு இயற்கையும் உதவ வேண்டும். காற்றின் வேகம் இதற்கு ஈடுகொடுத்தால் மட்டுமே உயரமாக பலூனில் பறக்க முடியும். இன்று (செவ்வாய்கிழமை) முதல் மாலை நேரங்களில் பொது மக்கள் பலூனில் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் முதல் முறையாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்