"எழும்பூர்" பெயர்க் காரணமான பெருமாள் கோயில்!

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (17:04 IST)
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இடம் எழும்பூர். இதற்கு முக்கிய காரணம் தென் மாவட்டங்களிலிருந்து ரெயிலில் வருபவர்கள் இங்கு தான் இறங்க வேண்டும்.

ஆனால் எழும்பூர் என்ற பெயர் வருவதற்கு காரணம் ஒரு கோயில் என்பது இப்பகுதிக்கு இன்னொரு சிறப்பாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த எழும்பூர் எல்.என்.பி.கோயில் தெருவில் உள்ளது அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் ஆகும்.

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் :

வைகுண்டத்தில் வீற்றிருக்கும் மகா விஷ்ணு இந்த மண்ணுலகில் பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு இருக்கிறார். இப்படி அவர், 600 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி தாயார் உடனுறை சீனிவாசப் பெருமாளாகி, எழும்பூர் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

அவரை கௌசிகர், அத்திரி, விஸ்வாமித்திரர், கௌதமர், பரத்துவாஜர், வசிஷ்டர், கஸ்யபவர் ஆகிய ஏழு முனிவர்கள் வழிபட்டு ஆராதித்து வந்தமையால், சீனிவாசப் பெருமாள் அமைந்த இடம் "எழுமூர்" என்று அழைக்கப்படலாயிற்று. இதுவே நாளடைவில் மருவி எழும்பூர் என அறியப்படுகிறது.

இத்திருக்கோயிலில் பூஜைமுறைகள் ஸ்ரீ வைகானச ஆகம முறைப்படி நடைபெறுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் தன்னை நாடி வந்து துதிப்பவர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கி அருள்பாலிப்பது கண்கூடு.

இதேபோன்று இவ்வாலயத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாரும், ஆஞ்சநேய பெருமானும் தன்னை நாடி வரும் இறையன்பர்களின் தேவைகளை வேண்டியவாறு ஆசி புரிந்து எல்லா நலன்களையும் தருவது தனிச் சிறப்பாகும்.

இத்திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இதர தெய்வங்களான ஸ்ரீராமர், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ விஸ்வ சேனர் (தும்பிக்கை ஆழ்வார்) ஆகியோரும் பக்தர்களுக்கு தங்களுடைய அருளை வாரி வழங்கி அனைவரையும் மேன்மைப்படுத்த தயங்கவில்லை.

உற்சவங்கள் :

இந்தக் கோயிலில் உற்சவங்களுக்கும் பஞ்சமில்லை. பிரம்மோற்சவம், கருடசேவை, ஸ்ரீ பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்த உற்சவம் ஆகியவை முக்கியமான உற்சவங்களாகும்.

புரட்டாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், ஆவணி திருவோணத்தில் பவித்ரோற்சவம், மாநில மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி, மார்கழியில் பகல்பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து உற்சவம், பங்குனியில் ஸ்ரீ ராம ஜெயந்தி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம், தமிழ், யுகாதி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விழாக்கள், சித்திரை சதயம் - திருவாதிரை முடிய உடையவர் உற்சவம் என உற்சவங்கள் இத்திருக்கோவிலில் நடைபெறுகின்றன.

இந்த உற்சவங்கள் யாவும் திருமலையில் நடைபெறும் இதே உற்சவ நாட்களில் தான் நடைபெறுகிறது என்பது சிறப்பு அம்சமாகும்.

சீனிவாசப் பெருமாள் கோயில் மண்டபம் :

புகழ்பெற்ற இத்திருக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அண்மையில் 5.45 லட்சம் செலவில் புதிய மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்குச் சென்று பத்மாவதி உடனுறை சீனிவாசப் பெருமாளை வழிபட்டு வாழ்வில் எல்லா நன்மைகளும் பெறுவோமாக!

வெப்துனியாவைப் படிக்கவும்