ஏகாதசியில் விரதமிருந்து பெருமாளை வணங்கினால் என்ன பலன்...?

வியாழன், 12 மே 2022 (07:38 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன.

 
அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும். 'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.
 
இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம். ஏகாதசி விரதம் மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம்.
 
ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருந்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். 
 
ஸ்ரீமகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் திவ்ய பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், ஸ்ரீ சூக்தம் விஷ்ணு சூக்தம் நாராயண சூக்தம் நாராயண உபநிஷத் தசாவதார ஸ்துதியை பாராயணம் செய்யலாம். மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் புராணங்கள் படிக்கலாம்.
 
ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஸ்ரீஹரியை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்