உடலுக்கு பலம் தரும் சூப்கள்

செவ்வாய், 11 ஜூன் 2013 (18:38 IST)
FILE
உடலுக்கு பலம் தரும் சூப்கள் வரிசையில் நெல்லிக்காய் மற்றும் வில்வ இலை சூப்கள் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களைப் பார்ப்போம்.

நெல்லிக்காய் வைட்டமின் 'சி' செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

நெல்லிக்காய் சூப்:

தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

நெல்லிக்காயை வேக வைத்த தண்ணீர் - 4 கப்
கார்ன் ப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

FILE
வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை என்பது சில நம்பிக்கையாளர்களின் கருத்து. இது உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.






வில்வ சூப்:

தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

வில்வ இலை - 1 கப்
(அ) வில்வ பொடி 15 கிராம் - 3 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி, பூண்டு - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கம்பு மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் நறுக்கிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறும் முன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்