குழந்தைகளின் உடல் பருமனுக்கு பெற்றோரே பொறுப்பு

திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:36 IST)
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பொறுப்பு அவர்களின் பெற்றோருக்கே என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை குண்டாக வளர்வதற்கு அனுமதித்து விட்டு, பின்னர் அவர்களின் உடல் நலத்தில் தங்களுக்கு அக்கறை இல்லை என்று பெற்றோர் கூற முடியாது என சிட்னியைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் பெற்றோர்கள் குறித்து டாக்டர்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்.

தவிர குழந்தைகள் குண்டாக வளர்வதால், குறிப்பிட்டதொரு நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

குழந்தைகள் குண்டாக இருப்பதால், அவர்கள் பல்வேறு அவதிக்குள்ளாக நேரிடும் என்று டாக்டர்களை மேற்கோள்காட்டி அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் ஓரளவுக்கு மேல் குண்டாக இருந்தால், அவர்களின் உடல் நலத்தின் மீது பெற்றோர் கவலை கொள்ள நேரிடுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் குறைந்த அளவிலான உணவை சாப்பிடுவதையும், போதிய உடற்பயிற்சியை மேற்கொள்வதையும் உறுதி செய்ய பெற்றோர் தவறி விடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சில குழந்தைகள் ஒருநாளில் சுமார் 6 மணி நேரம் வரை டி.வி. முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நிலை உள்ளதாகவும், இதனால் கொழுப்புச் சத்துடன் கூடிய கல்லீரல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தைகளின் உணவாக எண்ணெயுடன் கூடிய பதார்த்தங்களை கொரித்துக் கொண்டிருப்பதால், வழக்கமான உணவுப் பழக்க முறை மாறி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகளின் உடல் பருமனில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்