எய்ட்ஸ் நோயாளி என்று எழுதி ஒட்டி கர்ப்பிணி அவமதிப்பு
திங்கள், 22 ஜூன் 2009 (12:37 IST)
எய்ட்ஸ் நோய் தாக்கிய பெண், தனது கருவில் உள்ள குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்று பயந்து கருக்கலைப்பு செய்யச் சென்றபோது, அவரது நெற்றியில் எய்ட்ஸ் நோயாளி என்று எழுதி ஒட்டி அரசு மருத்துவமனை செவிலியர்கள் அவமானப்படுத்தி உள்ளனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் 2 மாத கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில், ரத்தப்பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கும் அந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் கருக்கலைப்பு செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனால் கருக்கலைப்பு செய்வதற்காக ஜாம்நகரில் உள்ள குருகோவிந்த் சிங் அரசு மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை அந்த பெண் சென்றார். தனக்கு எய்ட்ஸ் இருப்பதை மகப்பேறு மருத்துவ பிரிவு தலைவர் நளினி ஆனந்த்திடம் அந்த பெண் கூறியுள்ளார். இதைக் கேட்டதும், மற்ற நோயாளிகளிடம் இருந்து தள்ளி உட்கார் என்றும், செவிலியர்களை அழைத்து, இந்த பெண்ணுக்கு எய்ட்ஸ். எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் கூறினாராம்.
இதையடுத்து, எய்ட்ஸ் நோயாளி என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை அந்த பெண்ணின் நெற்றியில் செவிலியர்கள் ஒட்டினர். என்னை விட்டுவிடுங்கள் என்று அந்த பெண் கதறியபோதும், மருத்துவமனை முழுவதும் அவரை இழுத்து சென்றுள்ளனர். எய்ட்ஸ் நோயாளி என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்ததும் மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் அந்த பெண்ணை கேவலமாக பார்த்துள்ளனர். இது போதாது என்று உனக்கு எப்படி எய்ட்ஸ் வந்தது என்று அந்த பெண்ணிடம் செவிலியர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்து, விரைந்து வந்த சேவை அமைப்பினர், அவமானத்தால் கூனி குறுகிய பெண்ணை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். அவரது கணவரும் எய்ட்ஸ் நோயாளிதான். அவரிடம் இருந்துதான் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி உள்ளதாக சேவை அமைப்பின் தலைவர் சாவ்டா கூறினார்.
இது பற்றி விசாரணை நடத்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மத்திய - மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுகின்றன. இதன் மூலம் பொது மக்கள் ஓரளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எய்ட்ஸ் பாதித்தவர்கள் கூட சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணிகள் எய்ட்ஸ் தாக்காத குழந்தைகளைப் பெற்றெடுகின்றனர். அப்படியிருக்க பக்கத்தில் உட்காராதே என்றெல்லாம் ஒரு மருத்துவரே கட்டளையிட்டிருப்பது விநோதமாக உள்ளது.
குஜராத் அரசு மருத்துவமனையில் இந்த பெண்ணிற்கு ஏற்பட்ட கதியை பார்த்தால், எய்ட்ஸ் பற்றி முதலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்குத்தான் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தெரிகிறது.