இன்று போதைப் பொருள் எதிர்ப்பு தினம்

வெள்ளி, 26 ஜூன் 2009 (13:02 IST)
உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

webdunia photoWD
சட்டவிரோத மருந்துப் பொருட்களால் இளைஞர்களுக்கு ஏற்படுகின்ற முக்கிய பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற சர்வதேச பிரச்சாரத்தை போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (யூஎன்ஓடிசி) தலைமையேற்று நடத்துகிறது.

இந்த பிரச்சாரம் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை தடுப்பது, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவையே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.

நமது வாழ்விலும் சமூகத்திலும் போதைப் பொருட்களுக்கு இனி இடமில்லை என்பதே இந்த ஆண்டின் மையப் பொருளாகும். போதை பொருட்கள், அதை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்துக்கே தீங்கு விளைவிக்கிறது.

பொதுவாக இளைஞர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. தவறாக வழிநடத்தப்பட்டவர்களும், உடல் நலத்திற்கு ஏற்படும் கேடுகள் குறித்து அறியாதவர்களும்தான் அதிக அளவில் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் (யூஎன்ஓடிசி) பிரச்சாரமானது சர்வதேசக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போதைப் பொருட்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. இந்த போதைப் பொருட்களை உறுப்பு நாடுகள் மருத்துவ மற்றும் அறிவியல் செயல்பாடுகளுக்காக பெருமளவு கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளன. இவற்றை தவறாக பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு தீய விளைவுகளும் சமூகத்திற்கும் பெருங்கேடும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோகைன், கன்னாபீஸ், ஹாலுசினோஜென்ஸ், ஓபியேட்ஸ், அம்பிட்டமைன் மாதிரியான ஊக்க மருந்துகள் (ஏடிஎஸ்) போன்றவை சட்ட விரோத மருந்துப் பொருட்களாகும்.