எஸ்.எம்.எஸ். மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் விரைவில் அறிமுகம்

புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:24 IST)
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மொபைல் நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளன.
 
அதன்படி இண்டர்நெட் உதவியின்றி, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம், வங்கி கணக்கின் இருப்புத்தொகை விவரம், பின் நம்பர் மாற்றம், மினி ஸ்டேட்மென்ட் மற்றும் காசோலை புத்தகம் போன்ற சேவைகளை பெறுவதற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை புகுத்த மொபைல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 
கடந்த இரு மாதங்களாக அரசின் பணப்பரிமாற்ற நுழைவாயிலான தேசிய பணப்பரிமாற்ற நிறுவனத்துடன் இது சம்பந்தமாக பத்துக்கும் மேற்பட்ட மொபைல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த எஸ்.எம்.எஸ். சேவையை ஒவ்வொரு முறை உபயோகப்படுத்தும் போதும் வாடிக்கையாளரின் செல்போன் எண் கணக்கிலுள்ள இருப்புத்தொகையிலிருந்து ஒரு ரூபாய் 50 காசுகள் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.எம். தொழில்துறை தலைவரான ராஜன் எஸ். மேத்யூஸ் கூறியுள்ளார்.
 
வெகு விரைவில் இச்சேவை தொடங்கப்படும் என தெரிகிறது. இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் அது பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்