150 ரூபாய் நாணயம்: பிப்ரவரி 28 அறிமுகம்

புதன், 23 பிப்ரவரி 2011 (14:24 IST)
நமது நாட்டில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் வரும் 28ஆம் தேதி 150 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.

இந்தியாவின் வருமான வரித் துறை 1860ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது 2010ஆம் ஆண்டு 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியாவின் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையும் தொடங்கி 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனை சிறப்பிக்கும் வகையில் ரூ.150 நாணயம் வெளியிட நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. 150 ரூபாய் நாணயம், வெள்ளி, செப்பு, துத்தநாகம், ஈயம் ஆகியவற்றின் கலப்பில் செய்யப்படும். ஒரு பக்கத்தில் இந்தியாவின் வரைபடமும், மற்றொரு பக்கத்தில் சத்தியமேவ ஜயதே என்ற முழக்கமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இதே முன் பின் வடிவத்துடன் 5 ரூபாய் நாணயம் ஒன்றையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு நாணயங்களையும் வரும் திங்கட்கிழமை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்