மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கடன்

வியாழன், 28 மே 2009 (15:29 IST)
மலர் சாகுபடி செய்யும் 89 விவசாயிகளுக்கு ரூ.8 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி செயல் இயக்குனர் அனுப்சங்கர் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

குன்னூர் இந்தியன் வங்கி கிளையில், தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்) இந்தியன் வங்கி செயல் இயக்குனர் அனுப்சங்கர் பட்டாச்சாரியா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியன் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த ஆண்டு முதல் இடத்தை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் 1693 கிளைகள் உள்ளன. 763 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியன் வங்கி கல்வி கடன் வழங்குவதில் முதலிடத்தை பெற்றுள்ளது.

கல்வி கடனுக்கு முன்னுரிமை தந்து ரூ.1,700 கோடி அளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. குன்னூரில் 1,800 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

குன்னூர் கிளையில் இருந்து 400 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் கடன் கொடுக்கப்பட்டு உள்ளது. மலர் சாகுபடி செய்யும் 89 விவசாயிகளுக்கு ரூ.8 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை மேம்பட என்ன தொழில் செய்யலாம் என்று கலந்தாய்வு செய்து வருகிறோம். கிராம வளர்ச்சிக்கு ரூ.10 கோடி செலவில் 6 மையங்கள் அமைத்து உள்ளோம்.

இந்த மையங்களில் அந்தந்த இடங்களுக்கு ஏற்றார் போல், தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு குறைவான வட்டிக்கு கடன் கொடுத்து உள்ளோம். அவர்களது தேவை என்ன என்பதை அறிந்து அதன்படி கடன் வழங்கி வருகிறோம். இது வரை 12 தொழிற்சாலை களுக்கு கடன் வழங்கி உள்ளோம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்