நேரடி வரி விதிப்பு மசோதா:அறிக்கை மீது இன்று ஆய்வு

வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (13:35 IST)
மத்திய அரசு, வரும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நேரடி வரி மசோதா குறித்த வரைவறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு இன்று ஆய்வு செய்ய உள்ளது.

மத்திய அரசு, 1961ம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக, நேரடி வரி குறியீடு (டீ.டி.சி) மசோதாவை கடந்த 2010ம் ஆண்டு பார்லிமென்டில் தாக்கல் செய்தது.

பின்னர் இந்த மசோதா, நிதி துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இக்குழு, அதன் வரைவறிக்கையில், வருமான வரி சீர்த்திருத்தம் தொடர்பாக, பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளது.

இன்று பா.ஜ.க தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையில் கூடும் நிலைக்குழு கூட்டத்தில், இந்த அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த அறிக்கையில், வருமான வரி வரம்பை, 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும், வீடு மற்றும் வர்த்தக கட்டடங்கள் வாயிலான வருவாய்க்கு வெவ்வேறு வருமான வரி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும், இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள், தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் விதிமுறைகளை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மார்ச் 12ம் தேதிக்குள், நிலைக் குழு அதன் அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் அளிக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்