தேசிய முதலீட்டு நிதியில் மாற்றம் இல்லை-அமைச்சர்

வெள்ளி, 24 ஜூலை 2009 (15:57 IST)
தேசிய முதலீட்டு நிதி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாது என்று நிதி துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி, தேசிய முதலீட்டு நிதியில் சேர்க்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்து, மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதலீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியின் விதி முறைகளில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய நிதி துறையின் இணை அமைச்சர் பழனி மாணிக்கம் எழுத்து பூர்வமாக பதிலளிக்கையில், எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவித்தார்.

தேசிய புனல் மின்உற்பத்தி நிறுவனம், ஆயில் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்யும் பணி நடந்து வருகிறது. இதிலிருந்து கிடைக்கும் பணம், தேசிய முதலீட்டு நிதியில் சேர்க்கப்படும்.

தேசிய புனல் மின்உற்பத்தி நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் மாத வாக்கிலும், ஆயில் இந்தியாவின் பங்குகள் செப்டம்பர் மாத வாக்கிலும் விற்பனை செய்யபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை, அந்த நிறுவனத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்