தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், இந்த நிதி ஆண்டில் ரூ.800 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக, இதன் நிதி அதிகாரி ஏ. ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) சார்பில் காற்றாலைகளுக்கு நிதி வசதி மற்றும் மின்வாரியத்துக்கு மின்சாரம் விற்பனை செய்வது குறித்த கலந்துரையாடல் கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கக் கட்டிடத்தில் வியாழக்கிழமை நடந்தது.
இதில் டிக் நிதி அதிகாரி ஏ.ராஜேந்திரன் பேசும் போது, 1949 இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தொழில்துறைக்குத் தேவையான அனைத்து குறுகிய, நீண்டகாலக் கடன்களை அளித்து வருகிறது.
சென்ற ஆண்டு ரூ.520 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.800 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், கோவை மாவட்டத்துக்கு ரூ.146 கோடியும், திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.50 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலைகள் அமைப்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்பதால் டிக், காற்றாலை கடன் திட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் காற்றாலை நிறுவும் நிலம் மற்றும் காற்றாலை இயந்திரங்கள் வாங்க கடனுதவி அளித்து வருகிறது. இந்த கடன் பெற காற்றாலைகள் அமைப்பவர்கள், 25 விழுக்காடு முதலீடு செய்ய வேண்டும். பிணைய சொத்தாக கடன் தொகையில் 20 விழுக்காடு செலுத்த வேண்டும். கோவை மண்டல பகுதியில் காற்றாலைகளுக்கு விரைவாக கடனுதவி அளிக்கப்படுகிறது.
இதற்கான கடன் விண்ணப்பித்த 25 நாட்களில் பெற முடியும். இதற்கு 13.25 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். பழைய காற்றாலைகளை வாங்கவும் கடனுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.