காப்பீடு நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) தலைவர் ஜே. ஹரிநாராயண் தெரிவித்தார். தற்போது பொது காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுத் துறையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அந்நிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் எனில், இந்திய நிறுவனங்களின் கூட்டுடன் செயல்பட வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.
இதனால் பெரும்பாலான இந்திய நிதி நிறுவனங்கள் அயல்நாட்டில் பிரபலமாக உள்ள காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து காப்பீடு நிறுவனங்களைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றன. காப்பீடு நிறுவனங்கள் தங்களது நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள பங்குகளை வெளியிடலாம். ஆனால் அவை தங்களது சேவையைத் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும். இவ்விதி முறையைத் தளர்த்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலே பங்குகளை வெளியிடலாம் என அரசு அறிவிக்க உள்ளது.
பொதுப் பங்கு வெளியிட விரும்பும் நிறுவனங்கள் முன்னதாக ஐஆர்டிஏ அனுமதியைப் பெற வேண்டும். பங்கு வெளியீட்டிற்கான நிபந்தனை விவரங்களை ஐஆர்டிஏ விரைவில் வெளியிட உள்ளது. அதன்பிறகு அரசு அனுமதி கிடைத்ததும், காப்பீடு நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் தங்களது நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஹரிநாராயண் கூறினார்.